Sunday, December 23, 2012

நம்பி என்ற திருப்பதிகம்

நம்பி என்ற திருப்பதிகம்

(சுந்தரர் தேவாரம் : ஏழாம் திருமுறை)




063 பொது

பாடல் எண் : 1
மெய்யைமுற் றப்பொடிப் பூசியொர் நம்பி
வேதம்நான் கும்விரித் தோதியொர் நம்பி
கையில்ஓர் வெண்மழு வேந்தியொர் நம்பி
கண்ணும் மூன்றுடை யானொரு நம்பி
செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி
திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்
எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

பொழிப்புரை :
திருமேனி முழுதும் திருநீற்றைப் பூசியுள்ள ஒப்பற்ற நம்பியே , வேதங்கள் நான்கையும் விரித்துப் பாடிய ஒப்பற்ற நம்பியே , கையில் ஒரு வெள்ளிய மழுவை ஏந்திய ஒப்பற்ற நம்பியே , கண்கள் மூன்றை உடையவனாகிய நம்பியே , செம்மை நிறம் உடைய நம்பியே , புல்லிய , சிவந்த சடையை யுடைய நம்பியே , முப்புரங்களை , நெருப்பு எழுமாறு , வளைக்கப்பட்டதொரு வில்லால் எய்த நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


குறிப்புரை :

` நம்பி ` என்பது ஆடவருட் சிறந்தவனுக்கு உரிய பெயர் ; அது , சிலவிடத்து , ` தலைவன் ` என்னும் பொருளையும் தரும் . அவ்வாறு இத்திருப்பதிகத்துள் வருவனவற்றை அறிந்துகொள்க . ` நம்பி ` என்றன பலவற்றுள்ளும் இறுதியில் உள்ள ஒன்றை யொழித்து , ஏனைய வெல்லாம் , இயல்பு விளிகளாய் நின்றன . ` நம்பீ என்ற திருப்பதிகம் ` என்ற பாடமும் காணப்படுதலால் , அவைகளை , ` நம்பீ ` என்றே பாடம் ஓதினும் இழுக்காது . இவ்வாறன்றி , அவைகளை விளியல்லாத பெயர்களாகக் கொள்ளுதல் கூடாமை ஓர்ந்துணர்க . ` மெய்யை ` என்றதில் ஐ சாரியை . உருபாகக் கொண்டு , ` மேனியை மறைக்குமாறு ` என்று உரைத்தலுமாம் . ` பூசிய , ஓதிய , ஏந்திய ` என்பவற்றின் ஈற்று அகரங்கள் தொகுத்தலாயின . ` கண்ணும் ` என்ற உம்மை , அசைநிலை . ` மூன்றும் உடையான் ` என்பதும் பாடம் . ` உடையாரொரு நம்பி ` என்பது , பாடம் அன்று . சிறுமை , புன்மை மேற்று . செறுதல் - பகைத்தல் ; அஃது அதனாற் செய்யப்படும் செயலைக் குறித்தது . ` நீயே ` என்னும் பிரிநிலை ஏகாரத்தொடு கூடிய எழுவாய் , எஞ்சி நின்றது . ` எல்லாப் பிறப்பும் ` ஏழாய் அடங்குதலின் , ` எழுபிறப்பும் ` என்று அருளினார் . ` எங்கள் ` என்றது , தம்போலும் அடியார் பலரையும் உளப்படுத்து . நம்பியை , தலைவனை என்றாற் போல முன்னிலைக்கண் அவ்விகுதி பெற்றுவருதல் பிற்காலத்து அருகி , அஃது எஞ்சி நிற்றலே பெரும்பான்மையாயிற்று . ` கண்டாய் ` என்றது , முன்னிலை யசை .


பாடல் எண் : 2
திங்கள்நம் பிமுடி மேல்அடி யார்பாற்
சிறந்தநம் பிபிறந் தவுயிர்க் கெல்லாம்
அங்கண்நம் பிஅருள் மால்விசும் பாளும்
அமரர்நம் பிகும ரன்முதல் தேவர்
தங்கள்நம் பிதவத் துக்கொரு நம்பி
தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும்
எங்கள்நம் பியென்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே


பொழிப்புரை :

திருமுடியில் பிறையை அணிந்த நம்பியே , அடியாரிடத்து இனிது விளங்கி நிற்கும் நம்பியே , பிறப்பினை எடுத்த உயிர்களுக்கெல்லாம் அவ்விடத்து மறைந்து நின்று அருள்செய்யும் நம்பியே , மயக்கத்தைத் தரும் வானுலகத்தை ஆள்கின்ற , தேவர்கட்குத் தலைவனாகிய நம்பியே , முருகன் முதலிய முத்தர்கட்குத் தலைவ னாகிய நம்பியே , வழிபடப்படுதற்கு ஒப்பற்ற நம்பியே , ` நீயே உலகிற்குத் தந்தை ` என்று தெளிந்து உன் திருவடிகளைப் பணிந்து துதிக்கின்ற எங்களுக்குச் சிறந்து நிற்கின்ற நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


குறிப்புரை :

` அங்கண் அருள் நம்பி ` என மாற்றியுரைக்க . ` வினை வழிப்பட்ட வானுலகு ` என்பார் , ` மால் விசும்பு ` என்று அருளினார் . ` முதற்றேவர் ` என்றதில் , லகரம் கெடாது திரிந்து நின்றது , இசையின்பம் நோக்கி . ` ஒளியுடையவர் ` என்னும் பொருளதாகிய , ` தேவர் ` என்பது , ஈண்டு , ` ஞானம் மிக்கவர் ` என்னும் பொருளதாய் , முத்தரை உணர்த்திற்று . ` தவம் ` என்றது கடவுள் வழிபாட்டினை .


பாடல் எண் : 3
வருந்தஅன் றும்மத யானை யுரித்த
வழக்குநம் பிமுழக் குங்கடல் நஞ்சம்
அருந்துநம் பிஅம ரர்க்கமு தீந்த
அருளின்நம் பிபொரு ளாலரு நட்டம்
புரிந்தநம் பிபுரி நூலுடை நம்பி
பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி
இருந்தநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

பொழிப்புரை :
அன்று , மதத்தையுடைய யானையை அது வருந்துமாறு உரித்த நீதியை உடைய நம்பியே , ஓசையைச் செய்கின்ற கடலில் உண்டாகிய நஞ்சினை உண்ட நம்பியே , அதன்கண் தோன்றிய அமுதத்தைத் தேவர்களுக்கு ஈந்த அருளுடைய நம்பியே , அவ் வருளாகிய பொருள் காரணமாக அரிய நடனத்தைச் செய்கின்ற நம்பியே , முப்புரி நூலையுடைய நம்பியே , காலமும் வானமும் முதலிய எல்லாப் பொருள்களுமாய்ப் பலவாகி நிற்கின்ற நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


குறிப்புரை :

அசுரன் யானையாய் வந்தமையின் , அதனை உரித்தமை நீதியாயிற்று . ` அருளென் நம்பி ` ` அருளு நம்பி ` என்பன வும் , ` வருநட்டம் ` என்பதும் பாடம் அல்ல . ` அப்பொருளால் ` எனச் சுட்டு வருவித்துரைக்க . ` முழுதும் ` என்றவிடத்து , ` ஆகி ` என்பது தொகுத்தலாயிற்று .


பாடல் எண் : 4
ஊறுநம் பிஅமு தாஉயிர்க் கெல்லாம்
உரியநம் பிதெரி யம்மறை அங்கம்
கூறுநம் பிமுனி வர்க்கருங் கூற்றைக்
குமைத்தநம் பிகுமை யாப்புலன் ஐந்தும்
சீறுநம் பிதிரு வெள்ளடை நம்பி
செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு [ தென்றும்
ஏறுநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே


பொழிப்புரை :

உள்ளத்தில் , அமுதம்போல ஊற்றெழுகின்ற நம்பியே , எல்லா உயிர்கட்கும் புகலிடமாகிய நம்பியே , முனிவர்கட்கு , வேதத்தையும் , அதன் அங்கத்தையும் அறியக் கூறிய நம்பியே , அழித்தற்கரிய கூற்றுவனை அழித்த நம்பியே , அடக்குதற்கு அரிய ஐம்புல ஆசைகளையும் கடிந்தொதுக்கிய நம்பியே , திருவெள்ளடைக் கோயிலில் வாழும் நம்பியே , சிவந்த கண்களையும் , செழுமையான கொம்புகளையும் உடைய , வெண்மையான எருதையே எந்நாளும் ஏறுகின்ற நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


குறிப்புரை :

` குமையாப் புலன் ` என்றதில் குமைத்தல் , அடக்குதல் . ` வெள்ளடை ` என்றது , திருக்குருக்காவூர்க்கோயிலின் பெயர் .


பாடல் எண் : 5
குற்றநம் பிகுறு காரெயில் மூன்றைக்
குலைத்தநம் பிசிலை யாவரை கையில்
பற்றுநம் பிபர மானந்த வெள்ளம்
பணிக்கும்நம் பியெனப் பாடுத லல்லால்
மற்றுநம் பிஉனக் கென்செய வல்லேன்
மதியிலி யேன்படு வெந்துய ரெல்லாம்
எற்றுநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே


பொழிப்புரை :

அறிவிலேனாகிய யான் படுகின்ற கொடிய துன்பங்களை எல்லாம் ஓட்டுகின்ற நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , உன்னை , ` மலையை வில்லாக வளைத்த நம்பியே , பின்பு அதனைக் கையிற்பிடித்து நின்ற நம்பியே , பின்பு அதனால் பகைவரது மதில்கள் மூன்றை அழித்த நம்பியே , அடியார்களுக்குப் பேரின்ப வெள்ளத்தை அளித்தருளுகின்ற நம்பியே ` எனப் பாடுவதையன்றி ஒப்பற்ற பெரிய நம்பியாகிய உனக்கு யான் வேறு என் செய்ய வல்லேன் ! நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


குறிப்புரை :

குறுதல் - அழித்தல் . குற்று - அழித்து . குலைத்தல் - வளைத்தல் . பலவகை அடைபுணர்த்து ` நம்பி ` எனப் பாடுதற் கிடையில் , அடையின்றியே ` நம்பி ` என்றதனால் , ` ஒப்பற்ற பெரிய நம்பி ` என்பது பெறப்பட்டது . உயிர்கள் உன்னை வாழ்த்துதல் இயலுமன்றி , கைம்மாறு யாதும் செய்தல் இயலாது என்றவாறு .


பாடல் எண் : 6
அரித்தநம் பிஅடி கைதொழு வார்நோய்
ஆண்டநம் பிமுன்னை ஈண்டுல கங்கள்
தெரித்தநம் பிஒரு சேவுடை நம்பி
சில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடம்
தரித்தநம் பிசம யங்களின் நம்பி
தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை
இரித்தநம் பிஎன்னை ஆளுடை நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே


பொழிப்புரை :

உனது திருவடியைக் கைகளால் தொழுகின்றவரது துன்பங்களை அரித்தொழிக்கின்ற நம்பியே , நெருங்கிய உலகங்கள் பலவற்றையும் முன்பு ஆக்கிய நம்பியே , பின்பு அவைகளைக் காக்கின்ற நம்பியே , ஒற்றை எருதையுடைய நம்பியே , இல்லந்தோறும் சென்று ஏற்கும் சில பிச்சைக்கென்று , திருமேனியில் அதற்குரிய வேடத்தைப் பூண்ட நம்பியே , சமயங்கள் பலவற்றிற்கும் தலை வனாகிய நம்பியே , அன்று தக்கன் வேள்விச்சாலையிற் புகுந்து , ஆங்கிருந்த தேவரை எல்லாம் அஞ்சியோடச் செய்த நம்பியே , என்னை ஆளாக உடைய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


குறிப்புரை :

ஆளுதல் - புரத்தல் . ` முன்னை ` என்றதனால் , ` பின்னை ` என்பதும் பெறப்பட்டது . ` ஈண்டு உலகம் ` வினைத் தொகை . தெரித்தல் - தோற்றுவித்தல் . ` மருவனாய் மண்ணும் விண்ணும் தெரித்த நாளோ ` ( தி .6. ப .34 பா .1) என்று அருளிச் செய்தார் , திருநாவுக்கரசரும் .


பாடல் எண் : 7
பின்னைநம் பும்புயத் தான்நெடு மாலும்
பிரமனும் என்றிவர் நாடியுங் காணா
உன்னைநம் பிஒரு வர்க்கெய்த லாமே
உலகுநம் பிஉரை செய்யும தல்லால்
முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி
முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட
தென்னைநம் பிஎம் பிரானாய நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

பொழிப்புரை :
` நப்பின்னை ` என்பவள் விரும்புகின்ற தோள்களையுடையவனாகிய நீண்ட உருவத்தையுடைய திருமாலும் , பிரமனும் என்று சொல்லப்பட்ட இவர்கள் தேடியும் காணமாட்டாத நம்பியே , உலகிற்கு ஒருவனாய நம்பியே , உன்னை வாழ்த்துதலாகிய அதுவன்றி , அணுகுதல் ஒருவர்க்கு இயல்வதோ ! எல்லாப் பொருட்கும் முன்னே உள்ள நம்பியே , பின்னிய நீண்டசடையையுடைய நம்பியே , உன் இயல்பெல்லாம் இவை போல்வனவே ; ஆயினும் , இத்தனையை யும் தோன்றாவாறு அடக்கி , பெருநம்பியாகிய நீ எளிவந்து என்னை ஆண்டது என்னையோ ? எமக்குப் பெருமானாகிய நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப் பிலும் தலைவன் .


குறிப்புரை :

` காணா நம்பி ` என இயைக்க ` உலகு நம்பி ` என்றது , ` உலகிற்கு ஒரு நம்பி என்றதன் தொகை . ` அஃதல்லால் ` என்னும் ஆய்தம் , இசையின்பம் நோக்கித் தொகுக்கப்பட்டது . ` இவை ` என்றது , ` இத்தன்மையன ` என்னும் பொருளது . ` என்னை ` என்றது , வினா வினைக்குறிப்பு .


பாடல் எண் : 8
சொல்லைநம் பிபொரு ளாய்நின்ற நம்பி
தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி
வல்லைநம் பிஅடி யார்க்கருள் செய்ய
வருந்திநம் பிஉனக் காட்செய கில்லார்
அல்லல்நம் பிபடு கின்றதென் னாடி
அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற
இல்லநம் பிஇடு பிச்சைகொள் நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே

பொழிப்புரை :
சொற்களாய் நிற்கும் நம்பியே , அச்சொற்களின் பொருள்களாய் நிற்கும் நம்பியே , எப்பொருளின் தோற்றத்திற்கும் , ஒடுக்கத்திற்கும் முதல்வனாகிய நம்பியே , அடியார்க்கு அருள்செய்ய வல்லையாகிய நம்பியே , உனக்கு ஆட்செய்ய மாட்டாதார் , உலகில் வருத்தத்தை அடைந்து அல்லல் படுதற்குக் காரணம் என் நம்பி நம்பீ ? பதினெண் கணங்களும் போற்ற , உமையை ஒருபாகத்தில் வைத் திருந்தும் , இல்லங்களை நாடிச்சென்று அங்கு உள்ளவர் இடுகின்ற பிச்சையை ஏற்கின்ற நம்பி . நம்பீ , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


குறிப்புரை :

` சொல்லை ` என்ற ஐகாரம் , சாரியை . ` தோற்றம் ஈறுகட்கு ` என உருபு விரிக்க . ` உனக்கு ஆட்படாதவர் வருந்துதற்குக் காரணம் அவர்களது வினை ` என்பது திருக்குறிப்பு . அடுக்கிநின்ற விளிகள் இரண்டனுள் முன்னது வியப்புப் பற்றியும் , பின்னது வேண்டிக்கோடல் பற்றியும் வந்தன . வியப்பு , அடியார்களை வினை தாக்காதொழிதல் பற்றி எழுந்ததென்க . ` வைத்தும் ` என்னும் சிறப் பும்மை தொகுத்தலாயிற்று . அஃது அவள் எல்லா அறங்களையும் வளர்ப்பவளாதலைக் குறித்தது . ` தாரி ருந்தட மார்பு நீங்காத் தைய லாள்உல குய்யவைத்த காரி ரும்பொழிற் கச்சிமூதூர்க் காமக் கோட்டம் [ உண்டாகநீர்போய் ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே ` என்று அருளிச்செய்தல் காண்க . ( தி .7 ப .5 பா .6)


பாடல் எண் : 9
காண்டுநம் பிகழற் சேவடி என்றுங்
கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை
ஆண்டுநம் பிஅவர் முன்கதி சேர
அருளும்நம் பிகுரு மாப்பிறை பாம்பைத்
தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத்
திருத்துநம் பிபொய்ச் சமண்பொரு ளாகி
ஈண்டுநம் பிஇமை யோர்தொழு நம்பி
எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே


பொழிப்புரை :

நம்பியாகிய உனது கழல் அணிந்த திருவடியைக் காண்போம் என்னும் உறுதியோடும் மனம்பற்றி உன்னை விரும்பி உனக்கு ஆட்செய்கின்றவரை , நீ ஆட்கொண்டு அவர் விரைந்து உயர்கதி அடையுமாறு அருள்செய்கின்ற நம்பி நம்பீ , ஒளியையுடைய சிறந்த பிறை பாம்பைப் பொருந்துகின்ற முடியில் , ` கங்கை ` என்னும் நங்கை தங்கும்படி இனிது வைத்துள்ள நம்பி நம்பீ , சமணர்க்குப் பொய்ப்பொருளாய் மறைந்து நின்று , எங்கட்கு மெய்ப்பொருளாய் வெளிநிற்கின்ற நம்பியே , தேவர்கள் வணங்குகின்ற நம்பியே , நீயே எங்கட்கு எப்பிறப்பிலும் தலைவன் .


குறிப்புரை :

` என்றும் ` என்ற உம்மை சிறப்பு . உம்மை இன்றியே ஓதுதலுமாம் . ` நம்பி நம்பி ` என்னும் அடுக்குக்கள் , வேண்டிக் கோடலின்கண் வந்தன . ` பிறை பாம்பைத் தீண்டும் ` என்றது , அஃது அச்சம் இன்றி வாழ்தலைக் குறித்தது . ` கண்ணி தங்க ` என்றும் , ` திருந்து நம்பி ` என்றும் பாடங்கள் உள்ளன . ` சமணுக்குப் பொய்ப் பொருளாகி ` என்க . ` ஈண்டு நம்பி ` வினைத்தொகை . அதன்முன் , ` எங்கட்கு ` என்பது வருவிக்கப்பட்டது .


பாடல் எண் : 10
கரக்கும்நம் பிகசி யாதவர் தம்மைக்
கசிந்தவர்க் கிம்மையோ டம்மையி லின்பம்
பெருக்குநம் பிபெரு கக்கருத்தா * * * *

பொழிப்புரை :
உன்னிடத்து மனம் உருகாதவருக்கு உன்னை மறைத்துக்கொள்கின்ற நம்பியே , அன்பு செய்பவர்க்கு இப்பிறப்பிலும் , வரும் பிறப்பிலும் இன்பத்தை மிகத் தருகின்ற நம்பியே , ...........


குறிப்புரை :

` கரத்தி நம்பி ` என்பதும் பாடம் . இத்திருப்பதிகத்துள் , இதற்குப் பின்னுள்ளவற்றை நாம் பெற்றிலேம் . இத்திருப்பாட்டின் பின்னுள்ள அடிகள் மறைந்துபோயின

நன்றி: http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=7&Song_idField=7063

Friday, July 13, 2012

அற்புதத் திருவந்தாதி : காரைக்கால் அம்மையார்


அற்புதத் திருவந்தாதி

(காரைக்கால் அம்மையார்)



பாடல் எண் : 1
பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் - நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.

 

குறிப்புரை :
பயின்ற - பயின்று நன்கு உணர்ந்த. பின் - பிற்பட்ட காலம். என்றது, `சிறு காலையே` என்றபடி. சேர்ந்தேன் - துணையாக அடைந்தேன். என்றது, தமது ஞானத்தின் இயல்பைக் குறித்தவாறு. இதனையே சேக்கிழார்,

`வண்டல்பயில் வனவெல்லாம் வளர்மதியம் புனைந்தசடை
அண்டர்பிரான் திருவார்த்தை அணையவரு வனபயின்று`*

என அருளிச் செய்தார். நிறம் - அழகு. `மணிகண்டம்` எனப்படுதல் அறிக. மை ஞான்ற - கருமை நிறம் ஓரளவில் (கண்டத்தளவில்) ஒட்டி நின்ற. இடர் - துன்பம்; பிறவித் துன்பம். `எஞ்ஞான்று தீர்ப்பது` என்றது, `அதனை யறிந்திலேன்` என்னும் குறிப்பினது, அதாவது, `இப்பிறப்பிலோ, இனி வரும் பிறப்பிலோ` என்பதாம்.


பாடல் எண் : 2
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் - சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்நெஞ் சவர்க்கு.



குறிப்புரை :
படரும் நெறி - செல்லும் கதி என்றது, நற் கதியை. பணித்தல் - உரிமை செய்தல். உம்மைகள், `அவற்றை அவர் செய்யாதொழியார்` என்பதைக் குறித்தலின், எதிர்மறை. சுடர் உரு - ஒளி வீசுகின்ற உருவம். `கோலத்தோடு` என உருபு விரிக்க. `அவர்க்கு` என்பதன் பின், `ஆயினமையால்` என ஒரு சொல் வருவிக்க. `அன்பை அறுத்துவிடாது` என்றேனும், `அன்பு அறப் பெறாது` என்றேனும் உரைக்க.


பாடல் எண் : 3
அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்
அவர்க்கேநாம் அன்பாவ தல்லால் - பவர்ச்சடைமேற்
பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்
காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள். 



குறிப்புரை :
முதற்கண், `அல்லால்` என்றது, அன்பாதலைக் குறித்தும், பின்னர், `அல்லால்` என்றது, போழ் சூடும் அவரைக் குறித்துமாம். அன்புடையேமை, `அன்பு` என்றது உபசாரவழக்கு. பவர் - கொடி. `பவர் போலும் சடை` என்க. பாகு - ஒரு பகுதி. பாகு ஆக - ஒரு பகுதியில் பொருந்தும்படி போழ் - பிளவு. திங்களின் பிளவு. ஆள் - ஆளாம் தன்மை. `அவர்க்கு அல்லால், எம் ஆளாம் தன்மை. எஞ்ஞான்றும் மற்றொருவர்க்கு ஆகாதே போம்` என இயைத்துக்கொள்க. `ஆகாது` என்பதில் துவ்வீறும், பின்னர்த் தேற்றேகாரமும் தொகுத்தலாயின.


பாடல் எண் : 4
ஆளானோம் அல்லல் அறிய முறையிட்டாற்
கேளாத தென்கொலோ கேள்ஆமை - நீள்ஆகம்
செம்மையான் ஆகித் திருமிடறு மற்றொன்றாம்
எம்மையாட் கொண்ட இறை.


குறிப்புரை :
`கேள் ஆமை யாக` என ஆக்கம் வருவிக்க. கேள் - உறவு. ஆமை, ஆமை ஓடு. அதனை அணியத் தகும் பொருளாக அணிந்த. ஆகம் - மார்பு. மார்பைக் கூறவே, உடல் முழுவதையும் கூறியதாயிற்று. `ஆகம் செம்மையான்` என, சினையினது பண்பு முதல்மேல் ஏற்றப்பட்டது. செம்மையைச் சுட்டிப் பின், `மற்றொன்று` என்றமையால், `கருமை` என்றதாயிற்று. `ஆம் இறை, ஆட்கொண்ட இறை` எனத் தனித்தனி இயைக்க. `கேளாதது என்கொலோ` என்றது, `இன்னும் முறையிடல் வேண்டும் போலும்` என்பதாம்.


பாடல் எண் : 5
இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கஞ் செய்வான் - இறைவனே
எந்தாய் என இரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அதுமாற்று வான்.
 

குறிப்புரை :
இறக்கம் - நீக்குதல்; அழித்தல். `இறைவன்` என்றது, `சிவன்` என்றபடி. `இறைசிவன், கடன்வேந் தன்கையிறை, யிறுப்பு. இறை சிறந்தோன்` * என்னும் நிகண்டினால், `இறைவன்` என்பது சிவனுக்கே உரிய சிறப்புப் பெயராதல் விளங்கும். `உலகம் முழுவதையும் ஆக்கி அழிப்பவனும், உயிர்களுக்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தை அளிப்பவனும் சிவனே` என்பது உணர்த்தியவாறு.


பாடல் எண் : 6
வானத்தான் என்பாரும் என்கமற் றும்பர்கோன்
தானத்தான் என்பாரும் தாமென்க - ஞானத்தான்
முன்நஞ்சத் தாலிருண்ட மொய்யொளிசேர் கண்டத்தான்
என்நெஞ்சத் தானென்பன் யான். 

குறிப்புரை :
வானம் - சிவலோகம். `உம்பர்கோன்` என்றது சீகண்ட உருத்திரரை- அவரது தானம் (இடம்) கயிலாயம். இருண்ட - இருள்மயமான. மொய்யொளி - செறிந்த ஒளி. `என்பாரும், என்பாரும்` என்க. யான் `ஞானத்தானும், என் நெஞ்சத்தானும்` என்பன்` என இயைத்து முடிக்க. சிவலோகத்திலும், கயிலாயத்திலும் இருத்தல் தடத்த நிலையால், ஆகலின், சிவஞானம் பெற்ற சீவன் முத்தர்களது உள்ளத்தில் இருப்பவனாக உணர்தலே அவனது உண்மை நிலையை உணர்தலாம்` என்றபடி. மூன்றாம் அடியை முதலிற் கூட்டி, அதன் இறுதியில் இரண்டாம் உருபு விரித்து, பின் வந்த `என்க` என்பதன்பின் `அவன்` எனச் சுட்டியுரைக்க.


பாடல் எண் : 7
யானே தவமுடையேன் என்னெஞ்சே நன்னெஞ்சம்
யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் - யானே அக்
கைம்மா வுரிபோர்த்த கண்ணுதலான் வெண்ணீற்ற
அம்மானுக் காளாயி னேன். 

குறிப்புரை :
இரண்டாம் அடி ஈற்றில் உள்ள, `யானே` என்பது முதலாகத் தொடங்கி, ஈற்றடியின் முடிவில், `ஆதலின்` என்பது வருவித்து உரைக்க. நீற்ற - நீற்றையணிந்த, ஏகாரங்கள் ஏனையோரினின்றும் பிரித்தலின் பிரிநிலை. இவற்றால், `பிறர் தம்மை இவ்வாறு கூறிக்கொள்வன எல்லாம் மயக்க உரைகளாம்` என்றபடி. சிவனுக்கு ஆளாதலின் அருமையையும், பயனையும் குறித்தவாறு. `என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே இருங்கடல் வையத்து - முன்னம் நீபுரி நல்வினைப் பயனிடை... வலஞ்சுழி வாணனை வாயாரப் - பன்னி, ஆதரித்து ஏத்தியும், பாடியும் வழிபடும் அதனாலே` 1 எனவும், `எந்த மாதவம் செய்தனை நெஞ்சமே - பந்தம் வீடவையாய பராபரன்... சிந்தையுள்ளும் சிரத்துளும் தங்கவே`, `என்ன மாதவம் செய்தனை நெஞ்சமே - மின்னு வார்சடை வேத விழுப்பொருள்.... செந்நெறி - மன்னுசோதி நம் பால் வந்து வைகவே`2 எனவும் போந்தவற்றையும் உணர்க.


பாடல் எண் : 8
ஆயினேன் ஆள்வானுக் கன்றே பெறற்கரியன்
ஆயினேன் அஃதன்றே ஆமாறு - தூய
புனற்கங்கை ஏற்றானோர் பொன்வரையே போல்வான்
அனற்கங்கை ஏற்றான் அருள். 

குறிப்புரை :
`ஆள்வானுக்கு (ஆள் ஆயினேன்; அன்றே பெறற்கரியன் ஆயினேன்; அஃதன்றே அவன் அருள் ஆமாறு` என இயைத்து முடிக்க.

ஆள்வான் - உண்மையா ஆள்வான்; சிவன் `ஆள்வான்` என்றதனால், `ஆயினேன்` என்றது, `ஆள் ஆயினேன்` என்ற தாயிற்று. `பெறற்கு அரியன்` என்றது, `சிவன்` என்றபடி. `சிவனுக்கு ஆளாயினேன்; அன்றே யானும் சிவனா யினேன்; தன் அடியவரைத் தானாகச் செய்தலேயன்றோ சிவனது திருவருளின் சிறப்பு` என்றபடி. `திகழ்ந்த மெய்ப்பரம் பொருள் - சேர்வார் தாமே தானாகச் செயுமவன்` 3 என்றது காண்க. `தூய... போல்வான்` என்றது `சிவன்` என்றபடி. `புனலாகிய கங்கை` என்க. `அனற்கு அங்கை` என்பதை, `அங்கைக்கு அனல்` எனப் பின் முன்னாக நிறுத்தி, உருபு பிரித்துக் கூட்டி, நான்காம் உருபை ஏழாம் உருபாகத் திரித்துக் கொள்க.


பாடல் எண் : 9
அருளே உலகெலாம் ஆள்விப்ப தீசன்
அருளே பிறப்பறுப்ப தானால் - அருளாலே
மெய்ப்பொருளை நோக்கும் விதியுடையேன் எஞ்ஞான்றும்
எப்பொருளும் ஆவ தெனக்கு.
 

குறிப்புரை :
`ஈசன் அருளே உலகெலாம் ஆள்விப்பது, பிறப்பு அறுப்பது ஆனால், அவன் அருளாலே (யான்) மெய்ப் பொருளையும் நோக்கும் விதியுடையேன்; ஆதலின், எனக்கு எஞ்ஞான்றும் எப்பொருளும் ஆவது அவன் அருளே` என இயைத்து முடிக்க. ஈசன் - சிவன். `ஆனால்` என்பது தெளிவின்கண் வந்தது, `காண்பவன் சிவனே யானால்`1 என்பதிற் போல. `மெய்ப்பொருளை யும்` என்னும் சிறப்பும், இறந்தது தழுவியதும் ஆகிய உம்மை தொகுத்தலாயிற்று. நோக்குதல் - ஆராய்தல் . அறிவிப்பதொரு துணையின்றித்தானே அறியமாட்டாத இயல்பையுடையது உயிரினது அறிவு. அத்தன்மைத்தாகிய அவ்வறிவு, குறைபாடுடைய கருவி களைத் துணையாகக் கொண்டு அறியுமிடத்து அறியப்படும் பொருள் களது இயல்பு பொதுவாக விளங்குதலன்றி, உண்மையாக விளங்காது. அதனால், குறைவிலா நிறைவாகிய இறைவனது அருளைத் துணையாகக் கொண்டு அறியுமாயின், அப்பொழுது பொருள்களின் இயல்பு உண்மையாக விளங்கும்.

இனிப் பிறபொருளைக் காட்டுகின்ற கதிரவனது ஒளியே தன்னையும் காட்டுவதாகும் அல்லது, அவனைப் பிறிதோர் ஒளி காட்டமாட்டாது. ஆகையால், கதிரவன் ஒளியைக் கொண்டே கதிரவனைக் காணுதல் போல, இறைவனது அருளால் எல்லாப் பொருள்களையும் அறிதலுடன், அவனையும் அவன் அருளாலேதான் அறிதல் வேண்டும். அது பற்றியே `அவன் அருளாலே அவன் தாள் வணங்கி` 2 என்னும் திருமொழி எழுந்தது. அதனையே இங்கு அம்மையார்,`அருளாலே மெய்ப்பொருளையும் நோக்கும் விதியுடையேன்` என்றார். விதி - முறைமை. இங்ஙனம் எப்பொருளையும் அருளாலே நோக்காது, கருவிகளாலும், நூல்களாலும் விளங்கும் தம் அறிவு கொண்டே பொருள்களை நோக்குவார்க்கு மெய்யுணர்வு தோன்றாது, திரிபுணர்வே தோன்றும் என்க.

இதனையே,

இப்படியால் இதுவன்றித் தம்மிசைவு கொண்டியலும்,
துப்புரவில் லார்துணிவு துகளாகச் சூழ்ந்தார்.1

என்று அருளிச் செய்தார் சேக்கிழார்.

அருளால் எவையும் பார்என்றான்:- அத்தை
அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன்;
இருளான பொருள்கண்ட தல்லால், - கண்ட
என்னையும் கண்டிலன் என்னேடி, தோழி 2

எனத் தாயுமான அடிகளும் கூறினார். `மெய்ப்பொருளாவது யாது` என முதற்கண் ஆராய்தல், இறைவன் உள் நின்று உணர்த்தும் முறையை நோக்கும் நோக்கினாலும், அவன் ஆசான் மூர்த்தியாய் வந்து அறிவுறுக்கும் அருள்மொழியாலுமாம் என்க. அவ்வாற்றான் நோக்குவார்க்கே உண்மை புலனாவதன்றிப் பிறவாற்றான் நோக்கு வார்க்கே உண்மை புலனாகாது என்பதை,

சாத்திரத்தை யோதினர்க்குச் சற்குருவின் தன்வசன
மாத்திரத்தே வாய்த்தவளம் வந்துறுமே - ஆர்த்தகடல்
தண்ணீர் குடித்தவர்க்குத் தாகம் தணிந்திடுமோ
தெண்ணீர்மை யாய்இதனைச் செப்பு

எனத் திருக்களிற்றுப்படியார் 3 வலியுறுத்தி ஓதிற்று.


பாடல் எண் : 10
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன் - எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று. 

குறிப்புரை :
`ஈசன் - சிவன்` என்பது முன்னைப் பாட்டின் உரையிலும் கூறப்பட்டது. `மனத்துக்கு` என்பதில் அத்துச் சாரியை தொகுக்கப்பட்டது. வைப்பு - சேம நிதி. `அவனையே பிரானாகக் கொண்டேன்` என ஏகாரம் விரித்து, மாறிக் கூட்டுக. பிரான் - தலைவன்; ஆண்டான். `கொள்வது` என்பது பொதுப்பட அத் தொழிலை உணர்த்திநின்றது. உம்மை, வினையெச்ச விகுதி. எனக்கு அரியது ஒன்று உண்டே` என்க. ஏகாரம், எதிர்மறைப் பொருட்டாய வினா.


பாடல் எண் : 11
ஒன்றே நினைந்திருந்தேன் ஒன்றே துணிந்தொழிந்தேன்
ஒன்றேயென் உள்ளத்தின் உள்ளடைத்தேன் - ஒன்றேகாண்
கங்கையான் திங்கட் கதிர்முடியான் பொங்கொளிசேர்
அங்கையாற் காளாம் அது. 


குறிப்புரை :
நினைதல் - ஆராய்தல். துணிதல் - நிச்சயித்தல். `ஓழி`, துணிவுப் பொருண்மை விகுதி. உள்ளடைத்தல் - எப்போதும் மறவாது நினைதல். இறுதியில் `அவ்வொன்றே` எனச் சுட்டு வருவிக்க. ஏகாரம், எடுத்தோத்துப் பொருட்டாய், எழுவாய்த் தன்மை உணர்த்தி நின்றது. காண், முன்னிலையசை. `அவ்வொன்றே ஆளாம் அது` என முடிக்க. ஒளி - தீ; ஆகுபெயர்.


பாடல் எண் : 12
அதுவே பிரான்ஆமா றாட்கொள்ளு மாறும்
அதுவே யினியறிந்தோ மானால் - அதுவே
பனிக்கணங்கு கண்ணியார் ஒண்ணுதலின் மேலோர்
தனிக்கணங்கு வைத்தார் தகவு. 


குறிப்புரை :
முதற்கண் `அதுவே` என்றது, மேல், `உலகெலாம் ஆள்விப்பது` என்றதையும், இடைக்கண், `அதுவே` என்றது `பிறப்பறுப்பது` என்றதனையும் ஏற்புழிக் கோடாலால் சுட்டி நின்றன. இனி - இப்பொழுது. `அதுவே என அறிந்தோமானால்` என்க. `அதுவே தகவு` என முடிக்க. தகவு - தகுதி; தன்மை, பனிக்கு - பனிக்காலத்திற்கு ஆற்றாமல். அணங்குகின்ற - வாடுகின்ற. கண்ணி - முடிமாலை. `பனிக் காலத்திற்கு ஆற்றாது வாடுகின்ற` என்றது, கொன்றை மலரைக் குறித்தவாறு. அது கார்காலத்தில் மட்டுமே பூப்பது. `கண்ணி கார்நறுங் கொன்றை` * என்ற பழம் பாடலைக் காண்க. நுதல் - நெற்றி. தனிக்கண் - ஒற்றைக் கண். `அங்கும்` என, இறந்தது தழுவிய எச்ச உம்மை விரிக்க. அல்லாக்கால், `அங்கு` என்பது நின்று வற்றும். இது சிவனது தகைமையைப் புகழ்ந்தவாறு.


பாடல் எண் : 13
தகவுடையார் தாமுளரேல் தாரகலஞ் சாரப்
புகவிடுதல் பொல்லாது கண்டீர் - மிகவடர
ஊர்ந்திடுமா நாகம் ஒருநாள் மலைமகளைச்
சார்ந்திடுமே லே பாவந் தான்.


குறிப்புரை :
தகவு - தகுதி; நடுவு; நடுவு நிலைமை. அஃதாவது, பிறர்க்கு வரும் துன்பத்தையும் தமக்கு வரும் துன்பம் போன்றதாகவே உணரும் தன்மை. `தாம்` என்றது, `யாரேனும்` என்றபடி. தார் - கொன்றைத்தார். அகலம் - மார்பு. எனவே `சிவனது மார்பு` என்றதாயிற்று. `அதனை மலைமகளைச் சாரத் தனிமையில் புகவிடுதல் பொல்லாது` என்க. பொல்லாது - தீங்கு. தீங்கிற்கு ஏதுவா வதனைத் `தீங்கு` என்றது உபசார வழக்கு. கண்டீர், முன்னிலையசை. `தீங்கிற்கு ஏதுவாவது யாது` எனின், `அவனது மார்பில் மிகத் தீங்கு செய்ய ஊர்ந்து கொண்டிருக்கின்ற பெரிய பாம்பு அவள் மேலே என்றாவது ஒரு நாள் தாவியே விடும். அதனால், தகவுடையோர்க்கு அது பெண் பாவமாய் முடியும்` என்பதாம். அடர்தல் - தீங்கு செய்தல். தான். அசை.

எல்லாம் அறிந்திருந்தும் அம்மையார் பெருமானை நகையாடிப் புகழ்தற் பொருட்டு ஒன்றும் அறியாதார்போல் நின்று இங்ஙனம் கூறினார்; பத்தி பரவசத்தால். `பாம்பு முதலியவற்றுள் எதுவும் அவனையும் ஒன்றும் செய்யாது; அவளையும் ஒன்றும் செய்யாது; அவ்விருவரது தன்மையும் உலகர் தன்மையின் முற்றிலும் வேறானதே` என்பது கருத்து. 

இதவும் நிந்தாத் துதி
வாள்வரி யதளதாடை; வரிகோ வணத்தர்;
மடவாள்த னோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்
கோளரி, உழுவையோடு, கொலையானை, கேழல்
கொடுநாக மோடு, கரடி,
ஆளரி நல்ல நல்ல; அவைநல்ல; நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.*

என அருளிச்செய்த மெய்ம்மைத் திருமொழியைக் காண்க.

Sunday, May 27, 2012

எனக்கு இனிய எம்மானை :அற்புதத் திருவந்தாதி : காரைக்கால் அம்மையார்



அற்புதத் திரு அந்தாதி : காரைக்கால் அம்மையார்
எனக்கு இனிய எம்மானை, ஈசனை யான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன், எனக்கு அவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரியது ஒன்று?

நூல்: அற்புதத் திரு அந்தாதி (#10)

பாடியவர்: காரைக்கால் அம்மையார்

என் உயிருக்கு இனிமை தருபவனை, என் தலைவனை, அந்தச் சிவபெருமானை நான் நிரந்தரமாக என்னுடைய உள்ளத்தில் பதித்துவைத்திருக்கிறேன், அதனால் என் மனம் இனிக்கிறது.

நான் அந்தச் சிவனை என்னுடைய தலைவனாக ஏற்றுக்கொண்டேன். அதனால் அளவற்ற மகிழ்ச்சியை அடைந்தேன். இனி என்னால் செய்யமுடியாத ஒரு விஷயம் இந்த உலகத்தில் இல்லை!

குறிப்பு:

* காரைக்கால் அம்மையாரின் கதை:
- படிக்க: http://www.thevaaram.org/thirumurai_1/nayanmar_view.php?nayan_idField=16
- திரைப்பட வடிவத்தில் பார்க்க: Karaikkal Ammaiyar

* ’புனிதவதி’ (அல்லது) ’காரைக்கால் அம்மையார்’ எழுதிய இந்தப் பாடலின் இரண்டாவது வரியில் வரும் ‘இனிய வைப்பாக வைத்தேன்’ என்ற பகுதி மிகவும் அழகானது. ‘வைப்பு’ என்கிற அருமையான தமிழ்ச்சொல் இப்போது தப்பர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிற ஒன்றாகவே மாறிவிட்டது. (Except ‘நிரந்தர வைப்பு நிதி’ = Fixed Deposit :)

* இந்தப் பாடலின் வெண்பா வடிவம்:
எனக்கினிய எம்மானை ஈசனையான் என்றும்
மனக்கினிய வைப்பாக வைத்தேன், எனக்கவனைக்
கொண்டேன் பிரானாகக் கொள்வதுமே இன்புற்றேன்
உண்டே எனக்கரிய தொன்று

நன்றி:http://365paa.wordpress.com/2012/05/20/319

Sunday, May 13, 2012

அருணகிரி நாதரின் “தகரவர்க்க”ப் பாடல்




ருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியாக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார்.

அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லிப்புத்தூரார் வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றால் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். வில்லியும் ஒத்துக்கொண்டார்.

வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.

அது ஒரு “தகரவர்க்க”ப் பாடல். முற்றிலும் “த” என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் இவ்வகைப்பாடல்கள் உண்டு. “ஏகாக்ஷரப் பாடல்” என்று சொல்வார்கள். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரார் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே ‘வில்லி பாரதம்’ என்று வழங்குகிறது.

பாடலைப் பார்ப்போம்:
“திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே”


இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.
திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,

திதி – திருநடனத்தால் காக்கின்ற
தாதை – பரமசிவனும்
தாத – பிரமனும்
துத்தி – படப்பொறியினையுடையதத்தி – பாம்பினுடைய
தா – இடத்தையும்
தித – நிலைபெற்று
தத்து – ததும்புகின்ற
அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி – தயிரானது
தித்தித்ததே – தித்திக்கின்றதென்று
து – உண்ட கண்ணனும்
துதித்து – துதி செய்து வணங்குகின்ற
இதத்து – பேரின்ப சொரூபியான
ஆதி – முதல்வனே!
தத்தத்து – தந்தத்தையுடைய
அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத – தொண்டனே!
தீதே – தீமையே
துதை – நெருங்கிய
தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து – மரணத்தோடும்
உதி – ஜனனத்தோடும்
தத்தும் – பல தத்துக்களோடும்
அத்து – இசைவுற்றதுமான
அத்தி – எலும்புகளை மூடிய
தித்தி – பையாகிய இவ்வுடல்
தீ – அக்கினியினால்
தீ – தகிக்கப்படுகின்ற
திதி – அந்நாளிலே
துதி – உன்னைத் துதிக்கும்
தீ – புத்தி
தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்


இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் “திதத்தத்தத்” என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை “மடக்கு” அல்லது “யமகம்” என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை “அந்தாதி” என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் – தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன.

உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.



நன்றி: திரு.வாஞ்சீஸ்வரன் கோபால் (ponniyinselvan@yahoogroups.com)

Monday, April 23, 2012

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே : அப்பர்

திருநாவுக்கரசர் தேவாரம்



ஆறாம் திருமுறை 92 திருக்கழுக்குன்றம்

பாடல் எண் : 1
மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
  முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
    ஆலால முண்டுகந்த ஐயன் தன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
    புணர்வரிய பெருமானைப் புனிதன் தன்னைக்
காவலனைக் கழுக்குன்றம் அமர்ந்தான் தன்னைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.


பொழிப்புரை :
மூவிலை வேலாகிய சூலத்தைப் பிடித்த கையினனும், அழகிய கடவுளும், பிணமுதுகாட்டை உடையவனும், எல்லாவற்றிற்கும் அடியானவனும், தேவர்களுடைய அரசனும், ஆல கால விடத்தை மகிழ்ந்துண்ட தலைவனும், தாமரைமேல் வீற்றிருக்கும் நான்முகனும் திருமாலும் வணங்குதற்கு நெருங்க முடியாத பெருமானும், புனிதனும், எல்லாவற்றையும் காப்பவனும், கழுக்குன்றில் அமர்ந்தவனும் ஆகிய கற்பகத்தை நான் கண்ணாரக்கண்டேன்.

பாடல் எண் : 2
பல்லாடு தலைசடைமே லுடையான் தன்னைப்
    பாய்புலித்தோ லுடையானைப் பகவன் தன்னைச்
சொல்லோடு பொருளனைத்து மானான் தன்னைச்
    சுடருருவில் என்பறாக் கோலத் தானை
அல்லாத காலனைமுன் னடர்த்தான் தன்னை
    ஆலின்கீழ் இருந்தானை அமுதா னானைக்
கல்லாடை புனைந்தருளுங் காபா லியைக்
    கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.


பொழிப்புரை :
பற்கள் வெளியே தோன்றுகின்ற வெண் தலையைச் சடைமேல் தரித்தவனும், பாயும் புலியை உரித்துக்கொண்ட தோலாகிய உடையினனும், சிறந்த ஆறு குணங்களை உடையவனும், சொற்களும் பொருள்கள் எல்லாமும் ஆனவனும், என்புஅணி நீங்கப்பெறாத தோற்றத்துடன் ஒளிவிட்டுத் திகழ்பவனும், முறை யல்லாத செயலை மேற்கொண்ட காலனை முன் ஒறுத்தவனும், ஆலின் கீழ் இருந்தவனும், அமுதமானவனும், கல்லாடை புனைந்தருளும் காபாலியும் ஆகிய கற்பகத்தை நான் கண்ணாரக் கண்டேன். 

 நன்றி: தேவாரம்.ஆர்க்

Friday, April 20, 2012

சிவமயம் : பாட்டும் நானே பாவமும் நானே ..

பாடல்:
ஆ...ஞா ஆ...ஞா ஆ...ஞா

பாட்டும் நானே பாவமும் நானே...

பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைத்தேனே
பாட்டும் நானே பாவமும் நானே..ஏ..ஏ..

கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
கூட்டும் இசையும் கூத்தின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?
(பாட்டும் நானே..)

அசையும்.. பொருளில்.. இசையும் நானே
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கம் நானே
என்னிசை நின்றால் அடங்கும் உலகே..ஏ..


நான்.. அசைந்தால்.. அசையும்.. அகிலமெல்லாமே..
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா ?
ஆலவாயனொடு பாடவந்தவனின்
பாடும்வாயை இனி மூடவந்ததொரு
(பாட்டும் நானே..)


படம்: திருவிளையாடல்
இசை: KV மகாதேவன்
பாடியவர்: TM சௌந்தர்ராஜன்
வரிகள்: கண்ணதாசன்


காணொளி:

Friday, April 13, 2012

வள்ளிக் கணவன் பேரை, வழிப் போக்கர் சொன்னாலும்..: கிளிக் கண்ணி

முதற்க்கண் நன்றி:  முருகனருள்'வள்ளிக் கணவன் பேரை' இடுகை



பாடல் வரிகள்:
வள்ளிக் கணவன் பேரை,
வழிப் போக்கர் சொன்னாலும்
உள்ளம் குழையுதடி - கிளியே,
ஊனும் உருகுதடி!


மாலை வடி வேலவர்க்கு, வரிசையாய் நானெழுதும்
ஓலைக் கிறுக்காச்சுதே - கிளியே, உள்ளமும் கிறுக்காச்சுதே!


காட்டுக் கொடி படர்ந்த, கருவூரின் காட்டுக்குள்ளே
விட்டுப் பிரிந்தானடி - கிளியே, வேலன் என்னும் பேரோனடி!

கூடிக் குலாவி மெத்த, குகனோடு வாழ்ந்த தெல்லாம்
வேடிக்கை அல்லவடி - கிளியே, வெகு நாளின் பந்தமடி!


மாடுமனை போனாலென்ன? மக்கள் சுற்றம் போனாலென்ன?
கோடிச் செம்பொன் போனாலென்ன? - கிளியே, குறுநகை போதுமடி!

எங்கும் நிறைந் திருப்போன்! "எட்டியும் எட்டா திருப்போன்"!
குங்கும வர்ணனடி - கிளியே, குமரப் பெருமானடி!




கண்ணி = இரண்டு இரண்டு வரிகளாகத் தொடுக்கப்படும் சின்னச் சின்ன பாட்டு! 
மிகவும் எளிமையாக கிராமிய மெட்டில் இருக்கும்! அதனாலேயே எனக்கும் ரொம்பப் பிடிக்கும்! பராபரக் கண்ணி கேள்விப்பட்டு இருப்பீங்களே? யார் எழுதியது சொல்லுங்க பார்ப்போம்!

இந்தப் பாடல் கிளிக் கண்ணி! கிளியை நோக்கி முருகனின் காதலி பாடுகிறாள்! 
எழுதியவர் பெயர் தெரியலை (அனானி)! ஆனால் அருமையா இருக்கு! 
கோடிச் செம்பொன் போனாலென்ன? - கிளியே, அவன் குறுநகை போதுமடி! கிளியே, அவன் குறுநகை போதுமடி!
பாடலைக் கேட்கும்போது நம் உள்ளம் குழைந்து ஊனும் உருகிவிடுகிறது..

அந்த இரண்டு வரியை, நடுவில் உடைத்து, நாலு வரியாக்கி, 
கண்ணியைக் காவடிச் சிந்து மெட்டில் பாடுறாங்க! கேட்டு கிட்டே படிங்க!
காவடிச் சிந்தின் குத்தாட்டத்தைக் கொஞ்சம் மட்டுப்படுத்தி, கண்ணிப் பாட்டின் மெட்டிலே, இதோ காவடிச் சிந்து மெட்டு!

பாடல் காணொளி:- நித்ய ஸ்ரீ :

மீண்டும் நன்றியுடன்:  முருகனருள்'வள்ளிக் கணவன் பேரை' இடுகை

Thursday, April 12, 2012

இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!



கல் தோன்றி மண் தோன்றா
காலத்து முன் தோன்றிய மூத்தவன்

உணவுக்கு உழவையும், உடைக்கு நெசவையும்,
உலகுக்கு நாகரீகத்தையும் கற்றுக் கொடுத்தவன்

கடல் கடந்து கடாரம் சென்று ஆட்சி செய்தவன்.
கற்களை கலை வண்ணமாக்க
கலைக்கு சங்கம் வைத்தவன்.


மனுநீதியை காத்த மானுடன்
மக்களுக்காக தன்னுயிர் தந்தவன்;
மக்களாட்சி முறையை முதன் முதலாக நடத்தியவன்.

அகிலத்தின் முதல் அணையைக் கட்டியவன;
அணுவைப் பிளக்க முடியும் என்றவன்;
மொழிக்கு முதல் இலக்கணத்தை வகுத்தவன்,

கையிலே வாளேந்தி, நெஞ்சிலே பயமிழந்து,
சுற்றி வந்த பகைவர் கூட்டத்தை கையேந்த வைத்து,
அகில உலகத்தையும் வியக்கச் செய்தவன்,

பிறந்த குழந்தை இறந்து பிறந்தால்
வாளால் கீறி புதைத்தவன்;
மார்பிலே புண்ணேந்தி தன்(இன)மானமே
பெரிதென மரணத்தை மிரட்டியவன்

மானமே பெரிதென, கற்பே உயிரென,
ஒழுக்கமே நெறியென ,
அன்பே கடவுளென வாழ்ந்தவன்

வந்தாரையெல்லாம் வாழவைத்தவன்
வாரி வாரி இறைத்தவன்,
முல்லைக்கும் தேர்தந்த இனமவன்

வாழ்க்கைமுறையை உலகுக்கு உணர்த்தியவன்.
உலகத்துக்கே வழிகாட்டியவன் நம் தமிழன்!


தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்வோம்
தமிழுக்கு மேலுமொரு புதிய சரித்திரத்தைப் படைப்போம்..!



தமிழனாய் வாழ்வோம்!
தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுவோம்!!

நன்றி: பூர்விகா பிரசுர விளம்பரம்.

Saturday, March 31, 2012

நான்கு வேண்டாம்; நான்கு வேண்டும்!



முதுமைக்கு வேண்டியதை இளமையிலேயே தேடி வைத்துக்கொள்ள வேண்டும். வயதானால் சம்பாதிக்க முடியாதல்லவா? கொஞ்சம் நமக்கென்று சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். இதெல்லாம் வாழ்க்கைக்கு நன்மை!
அதுபோல, மறுமைக்கு வேண்டியதை இம்மையில் தேடிக்கொள்ள வேண்டும். இப்பொழுது நாம் செய்வதைக் கொண்டுதான் "மறுபிறப்பு' அமையப்போகிறது.
நன்றாக உழைத்த விவசாயிக்கு ஆறு மாதம் கழித்து வீடு நிறைய நெல் இருக்கும், அவன் உழைத்த உழைப்புக்கு. இப்பொழுது நல்ல பக்தி மார்க்கத்திலே இருந்து, தான தருமங்களைச் செய்து, தன்னாலே முடிந்த அளவுக்கு உதவி செய்கிறவர்கள்தான் மறுபிறப்பிலே இந்திரலோகம் பெறுவார்கள். சிரமமில்லாமல் பலன் வரும். நல்ல மனைவி, நல்ல குழந்தைகள், நல்ல ஆரோக்கியம், வயது 80 ஆகியும் 60தான் மதிப்பு போடலாம். இப்படியெல்லாம் அமைய வேண்டுமென்றால் முன்செய்த புண்ணியம் வேண்டும். ""பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்'' என்பார்கள். இந்தக் கருத்தை வைத்துக்கொண்டு அருணகிரிநாதர் ஒரு திருப்புகழ் பாடுகின்றார். ""ஆண்டவனே! எனக்கு மறுபிறப்பு ஒன்று வருமானால், (வராமல் இருந்தால் நல்லது, ஒருவேளை வரக்கூடிய சூழ்நிலை வந்தால்) "நான்கு வேண்டாம்; நான்கு வேண்டும்' என்கிறார்.


""திமிர வுததி யனைய நரக
செனன மதனில் - விடுவாயேல்
செவிடு குருடு வடிவு குறைவு
சிறிது மிடியு - மணுகாதே
அமரர் வடிவு மதிக குலமு
மறிவு நிறையும் - வரவேநின்
அருள தருளி யெனையு மனதொ
டடிமை கொளவும் - வரவேணும்''



மறுபிறப்பு ஒன்று வருமானால் செவிடு வேண்டாம். அருணகிரியார் முருகப் பெருமானைப் பார்த்து, ""சுவாமி! அடுத்த பிறப்பு வருமானால் என் காது செவிடாய் இருக்கக் கூடாது''. "குருடு' - கண் இல்லையானால் ஆண்டவனுடைய அருளுருவைப் பார்த்து ஈடுபட முடியாது. அபிஷேக அலங்காரங்களைக் காணமுடியாது. ""வடிவு குறைவு'' - அங்கக் குறைவு இருக்கக்கூடாது. கையில்லை என்றால் சுவாமியை எப்படிக் கும்பிடுவது? காலில்லை என்றால் எம்பெருமான் கோயிலை எப்படி வலம் வருவது? ""சிறிது மிடியும் அணுகாதே'' - வறுமை கொஞ்சம்கூட இருக்கக்கூடாது. மனிதனை அடியோடு வாட்டி வதைப்பது வறுமை. அதனால்தான் ""கொடிது கொடிது வறுமை கொடிது'' என்று ஒளவையார் சொன்னார்.
ஆகவே, ஆண்டவனே எனக்கு மறுபிறப்பு வருமானால் வறுமை இருக்கக்கூடாது. இந்த நான்கும் வேண்டாம் என்று சொன்னார்.
இதற்கு பதிலாக நான்கு வேண்டும் என்கிறார். அந்த நான்கு, அமரர் (தேவர்) வடிவம், உயர்குடிப் பிறப்பு, நல்லறிவு, நல்லொழுக்கம் இவை நான்கும் தந்தருள வேண்டும் என்கிறார். தினமும் பூஜையில் சொல்ல வேண்டிய பாட்டு இது. வேடிக்கையாகச் சொல்லவில்லை. அன்றாடம் பூஜையிலே இந்தப் பாட்டைச் சொன்னால் முருகப்பெருமான் 12 கையாலே தருவார்.
அடுப்பில்லாத வீடு இருக்கலாம்; ஆனால், திருப்புகழ் இல்லாத வீடு இருக்கக்கூடாது. வேதத்தின் சாரம் திருப்புகழ்!

நன்றி: தினமணி இடுகை-நான்கு வேண்டாம் ; நான்கு வேண்டும் !

Friday, March 30, 2012

கண்டேன் அவர் திருப்பாதம்! கண்டறி யாதன கண்டேன்!

அப்பர் கண்ட காட்சி 


திருநாவுக்கரசர் தேவாரம் 
திருவையாறு
நான்காம் திருமுறை  பதிகம்: [4:3] 

முன்னுரை: 

அமரர் கல்கியின் பொன்னியின் செல்வனில் நான் படித்த ஓர் அற்புதமான அத்தியாயம் 'அப்பர் கண்ட காட்சி'. அதில் உத்தமச் சோழர் ஆகவிருக்கும் சேந்தன் அமுதனார் 'மாதர்ப் பிறைக்கண்ணி யானை..' எனத் தொடங்கும் அப்பரின் ஐயாற்றுப் பதிகத்தை இனிதாய்ப் பாட, செம்பியன் மாதேவியாரும் அவரின் பரிவாரங்களும் அதை மெய் மறந்து கேட்டுவிட்டு, பின் செம்பியன் மாதேவியார் அப்பதிகதுக்குப் பின்வருமாறு விளக்கமளித்தார்..


"அப்பர் சுவாமி பிராயம் முதிர்ந்து உடல் தளர்ச்சியுற்றிருந்த சமயத்தில் கைலையங்கிரிக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க விரும்பினார். நெடுதூரம் வடதிசை நோக்கிப் பிரயாணம் செய்தார். மேலே நடக்க முடியாமல் களைத்து விழுந்தார். அச்சமயம் ஒரு பெரியவர் அங்கே தோன்றி, "அப்பரே! கைலையைத் தேடி நீ எங்கே செல்கிறீர்? பொன்னி நதிக் கரையிலுள்ள திருவையாற்றுக்குச் செல்லுங்கள்! பூலோக கைலாசம் அதுதான்" என்று அருளிச் செய்து மறைந்தார். அது இறைவன் வாக்கு என்று அறிந்த அப்பர் திரும்பித் திருவையாறு வந்தார். அந்த ஸ்தலத்தை நெருங்கி வந்த போதே அவருடைய உள்ளம் பரவசம் அடைந்தது. பல அடியார்கள் கையில் பூங்குடலையும் கெண்டியில் காவேரி நீரும் ஏந்தி ஐயாறப்பனைத் தரிசிப்பதற்காகச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்கள் இறைவனுடைய புகழைப் பாடிக்கொண்டு சென்றார்கள். அவர்கள் பின்னால் அப்பரும் சென்றார். அப்போது திருவையாறு நகர்ப்புறத்தில் ஆணும் பெண்ணுமாக இரு யானைகள் வந்தன. அந்தக் களிறும் பிடியும் சிவமும் சக்தியுமாக அப்பருக்குக் காட்சி அளித்தன. ஆலயத்தை அடைவதற்குள் இவ்வாறு பல விலங்குகளையும் பறவைகளையும் ஆண் பெண் வடிவத்தில் அப்பர் பார்த்தார். கோழி பெடையோடு கூடிக் குலாவி வந்தது; ஆண் மயில் பெண் மயிலோடு ஆடிப் பிணைந்து வந்தது; அருகிலிருந்த சோலையில் ஆண் குயிலோடு பெண் குயில் பாடிக் களித்துக் கொண்டிருந்தது; இடி முழக்கக் குரலில் முழங்கிக் கொண்டு ஏனம் ஒன்று அதன் பெண் இனத்தோடு சென்றது; நாரையும் அதன் நற்றுணையும் சேர்ந்து பறந்து சென்றன; பைங்கிளியும் அதன் பேடையும் பசுமரக்கிளைகளில் மழலை பேசிக் கொண்டிருந்தன; காளையும் பசுவும் கம்பீரமாக அசைந்து நடந்து சென்றன. இவ்வாறு ஆணும் பெண்ணுமாக அப்பர் சுவாமிகளின் முன்னால் தோன்றியவையெல்லாம் சிவமும் சக்தியுமாக அவருடைய அகக்கண்ணுக்கு புலனாயின. உலகமெல்லாம் சக்தியும் சிவமுமாக விளங்குவதைக் கண்டார். "இந்த உலகமே கைலாசம்; தனியாக வேறு கைலாசமில்லை" என்று உணர்ந்தார். இத்தகைய மெய்ஞான உணர்ச்சியோடு மேலே சென்றபோது, ஐயாறப்பரும், அறம் வளர்த்த நாயகியும் கைலாச வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருவதையும் பார்த்தார். தாம் அன்று புறக்கண்ணாலும் அகக்கண்ணாலும் பார்த்து அனுபவித்ததையெல்லாம் ஒவ்வொன்றாக இனிய தமிழில் இசைத்துப் பாடி அருளினார். இத்தனை காலமும் தாம் கண்ணால் கண்டும் கருத்தினால் அறியாமலிருந்தவற்றை இன்று திருவையாற்றில் கண்டு அறிந்து கொண்டதாக ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "கண்டறியாதன கண்டேன்!" என்று திரும்பத் திரும்ப வியந்து கூறினார்."

பாடல் எண் : ௧

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டே
ன்.

பொழிப்புரை :


விரும்பத்தக்க பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடியவர்களாய் அருச்சிக்கும் பூவும் அபிடேக நீரும் தலையில் தாங்கித் திருக்கோயிலை நோக்கிப் பெருமானைத் துதித்த வண்ணம் புகும் அடியவர் பின் சென்ற அடியேன் . கயிலை மலைக்குச் சென்றபோது ஏற்பட்ட உறுப்பழிவின் சுவடு ஏதும் தோன்றாதவகையில் தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு , கயிலை மலையிலிருந்து கால்சுவடு படாமல் திருவையாற்றை அடைகின்ற பொழுதில் , விருப்பத்திற்கு உரிய இளைய பெண்யானையோடு ஆண்யானை சேர்ந்து இரண்டுமாக வருவனவற்றைக் கண்டு , அவற்றை அடியேன் சத்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் , சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதனவற்றைக் கண்டவனாயினேன் .


பாடல் எண் : ௨

போழிளங் கண்ணியி னானைப் பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றியென் றேத்தி வட்டமிட் டாடா வருவேன்
ஆழி வலவனின் றேத்தும் ஐயா றடைகின்ற போது
கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :


சந்திரனுடைய பிளப்பாகிய பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானை , பூ வேலைகள் செய்யப்பட்ட மெல்லிய ஆடையை அணிந்த பார்வதியோடு இணைத்துப்பாடி , ` அவர்கள் திருவடி வாழ்க ` எனவும் , ` அவர்களுக்கு அடியேனுடைய வணக்கம் ` எனவும் சுழன்று ஆடிக்கொண்டு வரும் அடியேன் சக்கரப்படையை வலக்கையில் ஏந்தியுள்ள திருமால் நிலையாகப் புகழும் ஐயாற்றை அடையும்போது ஆண்கோழி பெண்கோழியுடன் கூட இரண்டுமாக மகிழ்வுடன் வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .



பாடல் எண் : ௩ 

எரிப்பிறைக் கண்ணியி னானை யேந்திழை யாளொடும் பாடி
முரித்த விலயங்க ளிட்டு முகமலர்ந் தாடா வருவேன்
அரித்தொழு கும்வெள் ளருவி ஐயா றடைகின்ற போது
வரிக்குயில் பேடையொ டாடி வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :


நிலவினை உடைய பிறைக் கண்ணியனாகிய பெருமானைச் சிறந்த அணிகளை உடைய பார்வதியோடும் , இணைத்துப்பாடிக் கூத்துக்கு ஏற்ற தாளங்களை இட்டுக் கொண்டு முக மலர்ச்சியோடு ஆடிக்கொண்டு வரும் அடியேன் மணலை அரித்துக் கொண்டு வெள்ளிய அருவிபோல ஓடிவருகின்ற காவிரியின் வடகரைக்கண்ணதாகிய திருவையாற்றை அடையும் நேரத்தில் காதற் கீதங்களைப் பாடும் ஆண்குயில் பெண்குயிலோடு கலக்க . இரண்டும் ஓரிடத்தில் தங்கிப் பின் இணையாக வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .



பாடல் எண் : ௪

பிறையிளங் கண்ணியி னானைப் பெய்வளை யாளொடும் பாடித்
துறையிளம் பன்மலர் தூவித் தோளைக் குளிரத் தொழுவேன்
அறையிளம் பூங்குயி லாலும் ஐயா றடைகின்ற போது
சிறையிளம் பேடையொ டாடிச் சேவல் வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :


பிறை சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப்பாடி நீர்த்துறையை அடுத்துவளர்ந்த செடி கொடிகளின் பல மலர்களையும் அடியேன் தோள்கள் மகிழுமாறு அருச்சித்து நான் தொழுவேனாய்ப் பாடும் இளங் குயில்கள் ஒலிக்கும் ஐயாறு அடைகின்றபோது , இளைய பேடையோடு கலந்து வெண் சிறகுகளை உடைய சேவல் அன்னம் இணையாக வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .



பாடல் எண் : ௫

ஏடு மதிக்கண்ணி யானை யேந்திழை யாளொடும் பாடிக்
காடொடு நாடு மலையுங் கைதொழு தாடா வருவேன்
ஆட லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
பேடை மயிலொடுங் கூடிப் பிணைந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :


இளைத்த பிறையைச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடிக் காடுகளையும் நாடுகளையும் மலைகளையும் கையால் தொழுதுகொண்டு ஆடி மகிழ்ந்து வரும் அடியேன் எம்பெருமான் கூத்தாடுதலை விரும்பித் தங்கியிருக்கும் ஐயாற்றை அடையும்போது ஆண் மயில் பெடைமயிலொடும் கலக்க இரண்டும் இணையாய் ஒன்றொடொன்று கூடி வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .



பாடல் எண் : ௬

தண்மதிக் கண்ணியி னானைத் தையனல் லாளொடும் பாடி
உண்மெலி சிந்தைய னாகி யுணரா வுருகா வருவேன்
அண்ண லமர்ந்துறை கின்ற ஐயா றடைகின்ற போது
வண்ணப் பகன்றிலொ டாடி வைகி வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.


பொழிப்புரை :


குளிர்ந்த பிறை சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடி உள்ளம் குழைந்த திருவடி நினைவினேன் ஆகி உணர்ந்து உருகி வரும் அடியேன் தலைமையை உடைய எம்பெருமான் உகந்தருளியிருக்கின்ற ஐயாற்றை அடையும்போது நல்ல நிறமுடைய ஆண் பகன்றில் பெண் பகன்றிலோடு இணைந்து இரண்டுமாய் வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .



பாடல் எண் : ௭

கடிமதிக் கண்ணியி னானைக் காரிகை யாளொடும் பாடி
வடிவொடு வண்ண மிரண்டும் வாய்வேண் டுவசொல்லி வாழ்வேன்
அடியிணை ஆர்க்குங் கழலான் ஐயா றடைகின்ற போது
இடிகுர லன்னதொ ரேன மிசைந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :


விரும்பும் பிறை சூடிய பெருமானை மெல்லியலாள் ஆகிய பார்வதியோடும் இணைத்துப்பாடி , வைகறையில் துயில் எழுந்து எம்பெருமானுக்கு உகப்புடையனவாகப் பெறப்படும் மலர்களைக் கொய்துவரும் அடியேன் , சிறந்த அணிகலன்களையும் பொன்னையும் மணியையும் கரையில் சேர்க்கும் காவிரியின் வடகரையில் அமைந்த ஐயாற்றை அடையும்போது , பெரிய ஆண்மான் தன் பெடையோடு இணைய இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

பாடல் எண் : ௮

விரும்பு மதிக்கண்ணி யானை மெல்லிய லாளொடும் பாடிப்
பெரும்புலர் காலை யெழுந்து பெறுமலர் கொய்யா வருவேன்
அருங்கலம் பொன்மணி யுந்தும் ஐயா றடைகின்ற போது
கருங்கலை பேடையொ டாடிக் கலந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :


விளக்கம் பொருந்திய பிறை சூடிய பெருமானை மெல்லியலாள் ஆகிய பார்வதியோடும் இணைத்துப்பாடி , வைகறையில் துயிலெழுந்து எம்பெருமானுக்கு உகப்புடையனவாகப் பெறப்படும் மலர்களைக் கொய்துவரும் அடியேன் , சிறந்த அணிகலன்களையும் பொன்னையும் மணியையும் கரையில் சேர்க்கும் காவிரியின் வடகரையில் அமைந்த ஐயாற்றை அடையும்போது , பெரிய ஆண் மான் தன் பெடையோடு இணைய இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

பாடல் எண் : ௯

முற்பிறைக் கண்ணியி னானை மொய்குழ லாளொடும் பாடிப்
பற்றிக் கயிறறுக் கில்லேன் பாடியும் ஆடா வருவேன்
அற்றருள் பெற்றுநின் றாரோ டையா றடைகின்ற போது
நற்றுணைப் பேடையொ டாடி நாரை வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :


அமாவாசையை அடுத்து ஒருகலையினதாய் முற்பட்டுத்தோன்றும் பிறை சூடிய பெருமானைச் செறிந்த கூந்தலை உடைய பார்வதியோடும் இணைத்துப்பாடி , அவன் திருவடிகளைப் பற்றி உலகினோடு உள்ள பாசத்தைப் போக்கிக் கொள்ள முடியாத அடியேன் , பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் வந்து எம்பெருமானுக்கே அற்றுத் தீர்ந்து அவன் அருள் பெற்று நிலவும் அடியார்கள் உடன் ஐயாற்றை அடையும்போது , சிறந்த துணையாகிய பெடையோடு ஆண் நாரைகள் கூட இரண்டுமாக இணைந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .



பாடல் எண் :  ௧௦0

திங்கள் மதிக்கண்ணி யானைத் தேமொழி யாளொடும் பாடி
எங்கருள் நல்குங்கொ லெந்தை யெனக்கினி யென்னா வருவேன்
அங்கிள மங்கைய ராடும் ஐயா றடைகின்ற போது
பைங்கிளி பேடையொ டாடிப் பறந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :


பிறை சூடிய பெருமானைத் தேன் போன்ற சொற்களை உடைய பார்வதியோடு இணைத்துப் பாடி எம்பெருமான் இப்பொழுது அடியேனுக்கு எங்கு அருள் செய்வானோ என்று திருத்தலங்களை வழிபட்டுவரும் அடியேன் இளமங்கையர்கள் கூத்து நிகழ்த்தும் ஐயாற்றை அடையும்போது பச்சைக் கிளி தன் பெடையோடு மகிழ , இரண்டுமாக இணைந்து பறந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .


பாடல் எண் : ௧௧

வளர்மதிக் கண்ணியி னானை வார்குழ லாளொடும் பாடிக்
களவு படாததொர் காலங் காண்பான் கடைக்கணிற் கின்றேன்
அளவு படாததொ ரன்போ டையா றடைகின்ற போது
இளமண நாகு தழுவி யேறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.

பொழிப்புரை :


வளர்தற்குரிய பிறை சூடிய பெருமானை நீண்ட கூந்தலை உடைய பார்வதியோடு இணைத்துப்பாடி , வீணாகக் கழிக்கப்படாத தொரு காலத்தைக் காணும் பொருட்டுக் கடைவாயிலின்கண் நிற்கும் அடியேன் , எல்லையற்ற அன்போடு ஐயாற்றை அடையும் பொழுது இளமையை உடையதாய்க் கலத்தலுக்கு ஏற்றதாய பசுவினை , ஏறு தழுவ , இரண்டுமாய் இணைந்து வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .


நன்றி (பாடலும் பொழிப்புரையும்): http://www.thevaaram.org/thirumurai_1/onepage.php?thiru=4&Song_idField=4003

Saturday, March 24, 2012

~: வா வா கண்ணா.. உள்ளம் உருகும் கண்ணன் பாடல்கள்..! :~

வா வா கண்ணா..!
உள்ளம் உருகும் கண்ணன் பாடல்கள்..


௧. சிரித்தாடி மகிழ்வாக வா வா கண்ணா!..



௨. ஆலிலைக் கண்ணா..





௩. கண்ணா கண்ணா ஓடிவா..!

Friday, February 17, 2012

பசி வந்திடப் பத்தும் பறந்து போம் !

பசி வந்திடப் பத்தும் பறந்து போம் !

மானம்
குலம்
கல்வி
வண்மை
அறிவுடைமை
தானம்
தவம்
உயர்ச்சி
தாளாண்மை
காமம்


மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம் (நல்வழி பாடல் 26)


நன்றி:வாஞ்சி  ponniyinselvan@yahoogroups.com லிருந்து.. 

பதினாறு பேறு !


பதினாறு பேறு ! 

1. கல்வி
2. புகழ்
3. வீரம்
4. விஜயம்-வெற்றி
5.சந்தானம் - மக்கட்பேறு
6. துணிவு
7. செல்வம்
8. மதிப்புமிக்க தானியவகைகள்
8. தேக ஆரோக்கியம்
9. போகம் 
10.அறிவு
11. அழகு
12. புதிது புதிதாய்க் கிடைக்கும் சிறப்புகள்
13.தான தர்மம்
14. நற்குடிப்பிறப்பு
15.நோயின்மை
16. நீண்ட ஆயுள்

துதி வாணி வீரம் விசயம் சந்தானம் துணிவு தன
மதிதானியம் செளபாக்கியம் போகம் அறிவு அழகு
புதிதாம் பெருமை, அறம் குலம் நோவகல் பூண்வயது
பதினாறு பேறும் தருவாய் மதுரைப் பராபரனே.      
                                                               - காளமேகப் புலவர்


நன்றி: வாஞ்சி ponniyinselvan@yahoogroups.com லிருந்து..

ஆயகலைகள் 64



அறுபத்து நான்கு ஆயகலைகள்
          அறுபத்து நான்கு கலைகள் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர் தொகுத்தளித்த செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (A Comprehensive Etymological Dictionary of Tamil Language) Vol.1-Part-1, 545-548ஆம் பக்கங்களில் கண்டபடி பட்டியல் இடப்பட்டுள்ளது.
          நான்கு வேதம், ஆறு சாத்திரம், பதினெண்புராணம், அறுபத்துநான்கு கலைகள், இவை ஆரியவழி வந்த இலக்கிய மரபெனினும், 'அறுபத்து நான்கு கலை' என்ற பெயர் தமிழாதலாலும், அறுபத்து நான்காக சொல்லப்பட்ட கலைகள் அத்தனையும் தமிழருக்கும் உரித்தானதாலும், தமிழ்க் கலைகள் ஆரிய கலைகட்குக் காலத்தால் முந்தியவையென்பதாலும், அறுபத்து நான்கு கலைப் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது. மேலும் விவரங்கள் எங்கிருப்பினும் எடுத்துக் கொள்வதே இன்றைய நிலைப்பாடு.
          கீழே தரப்பட்ட முதற் பட்டியல் ஆரிய இலக்கிய மரபை வழுவியது. வடமொழிச் சொற்களத்தனையும், மொழியாக்கஞ் செய்யப்பட்டு, அருகிலேயே தரப்பட்டுள்ளன. பொதுவான சொற்கள் அல்லது ஏற்கனவே தமிழில் புழக்கத்தில் இருக்கும் சொற்கள் தனியாகத் தரப்பட்டுள்ளன. இரண்டாம் பட்டியல் காலத்தால் பிற்பட்டதாகையால், தமிழ்மொழிச் சொற்களால் அடங்கப் பெற்றது. கடைசியாக சொல்லப்பட்ட அறுபத்து நான்கு கலையின் ஆங்கில மொழி பெயர்ப்பு, வாத்ஸ்யாயனரின் காமசூத்திராவை ஆங்கில மொழியாக்கஞ் செய்த டாக்டர் சந்தோஷ்க் குமார் முகர்ஜி தொகுத்த அறுபானாற் கலையின் ஆங்கிலப் பட்டியலாகும்.
அறுபத்து நான்கு கலைகள்
எண்தமிழ் விளக்கம்வடசொல்
1.எழுத்திலக்கணம்அக்கரவிலக்கணம்
2.எழுத்தாற்றல்லிகிதம்
3.கணிதவியல்கணித சாத்திரம்
4.மறை நூல்வேத சாத்திரம்
5.தொன்மம்புராணம்
6.இலக்கணவியல்வியாகரணம்
7.நய நூல்நீதி சாத்திரம்
8.கணியக் கலைசோதிட சாத்திரம்
9.அறத்துப் பால்தரும சாத்திரம்
10.ஓகக் கலையோக சாத்திரம்
11.மந்திரக் கலைமந்திர சாத்திரம்
12.நிமித்தகக் கலைசகுன சாத்திரம்
13.கம்மியக் கலைசிற்ப சாத்திரம்
14.மருத்துவக் கலைவைத்திய சாத்திரம்
15.உறுப்பமைவுஉருவ சாத்திரம்
16.மறவனப்புஇதிகாசம்
17.வனப்புகாவ்யம்
18.அணி இயல்அலங்காரம்
19.இனிதுமொழிதல்மதுரபாஷணம்
20.நாடகக் கலைநாடக சாத்திரம்
21.ஆடற் கலைநிருத்திய சாத்திரம்
22.ஒலிநுட்ப அறிவுசப்த ப்ரம்மம்
23.யாழ் இயல்வீணையிலக்கணம்
24.குழலிசைவேணு கானம்
25.மத்தள நூல்மிருதங்க சாத்திரம்
26.தாள இயல்தாள சாத்திரம்
27.வில்லாற்றல்அஸ்திர ப்ரயோகம்
28.பொன் நோட்டம்கனகப் பரிட்சை
29.தேர்ப் பயிற்சிஇரதப் பயிற்சி
30.யானையேற்றம்கஜப் பரிட்சை
31.குதிரையேற்றம்அசுவப் பரிட்சை
32.மணி நோட்டம்இரத்தினப் பரிட்சை
33.மண்ணியல்பூமிப் பரிட்சை
34.போர்ப் பயிற்சிசங்கிராமவிலக்கணம்
35.கைகலப்புமல்யுத்தம்
36.கவர்ச்சியியல்ஆகரூடணம்
37.ஓட்டுகைஉச்சாடணம்
38.நட்பு பிரிக்கைவித்வேடணம்
39.மயக்குக் கலைமோகன சாத்திரம்
40.புணருங் கலைகாம சாத்திரம்
41.வசியக் கலைவசீகரணம்
42.இதளியக் கலைஇரசவாதம்
43.இன்னிசைப் பயிற்சிகாந்தருவ வாதம்
44.பிறவுயிர்மொழிபைபீல வாதம்
45.மகிழுறுத்தம்கவுத்துக வாதம்
46.நாடிப் பயிற்சிதாதுவாதம்
47.கலுழம்காருடம்
48.இழப்பறிகைநஷ்டம்
49.மறைத்ததையறிதல்முஷ்டி
50.வான்புகுதல்ஆகாய ப்ரவேசம்
51.வான் செல்கைஆகாய கமனம்
52.கூடுவிட்டு கூடுபாய்தல்பரகாய ப்ரவேசம்
53.தன்னுறு கரத்தல்அதிருசியம்
54.மாயம்இந்திரஜாலம்
55.பெருமாயம்மகேந்திரஜாலம்
56.நீர்க் கட்டுஜல ஸ்தம்பனம்
57.அழற் கட்டுஅக்னி ஸ்தம்பனம்
58.வளிக் கட்டுவாயு ஸ்தம்பனம்
59.கண் கட்டுத்ருஷ்டி ஸ்தம்பனம்
60.நாவுக் கட்டுவாக்கு ஸ்தம்பனம்
61.விந்துக் கட்டுசுக்ல ஸ்தம்பனம்
62.புதையற் கட்டுகனன ஸ்தம்பனம்
63.வாட் கட்டுகட்க ஸ்தம்பனம்
64.சூனியம்அவஸ்தை ப்ரயோகம்


அறுபத்து நான்கு கலைகள் - வேறொரு பட்டியல் 
எண்தமிழ்க் கலைவடசொல்English Word
1.பாடல்கீதம்Song
2.இன்னியம்வாத்யம்Music Instruments
3.நடம்நிருத்யம்Dance
4.ஓவியம்சித்ரம்Drawing Instruments
5.இலைப் பொட்டுக் கத்தரிக்கைபத்ர திலகம்Art of leaf-cutting design
6.அரிசிப் பூக்கோலம்---Art of rice-powder drawing
7.பூமளியமைக்கை-----
8.ஆடையுடைப் பற்களுக்கு வண்ணமமைக்கை---Art of colouring for cloths
9.பள்ளியறை/குடிப்பறையில் மணிபதிக்கை--Art of embedding gems in bedrooms
10.படுக்கையமைக்கைமஞ்சம்Art of bed-making
11.நீர்க்கிண்ண இசைஜலதரங்கம்Art of making music with watter-filled cups
12.நீர்வாரியடிக்கை---Art of water-sparying
13.உள்வரிவேடங்கொள்கைArt of Camaflage
14.மாலை தொடுக்கை---Art of making garlands
15.மாலையணிகை---Art of wearing Garlands
16.ஆடையணி சுவடிக்கை---Art of make-up with clothes
17.சங்கினால் காதணி--Art of making ear-rings with shells
18.விரை கூட்டுகை------
19.அணிகலன் புனைகை---Art of self make-up
20.மாயஞ் செய்தல்இந்திர ஜாலம்Art of magic
21.குசுமாரரின் காமநூல்நெறிகௌசுமாரம்Kousumar's art of kamasutra
22.கைவிரைவுஹஸ்த லாவகம்Speedy hands
23.மடைநூல்பாக சாத்திரம்Art of cooking
24.தையல் வேலை---Art of Stiching.
25.நூலால் வேடிக்கை--Art of magic with strands
26.வீணையுடுக்கைப் பயிற்சிவீணை டமருகப் பயிற்சிArt of handling Veena Instrument
27.விடுகதைப்ரேளிகைArt of Riddling
28.ஈற்றெழுத்துப் பாப்பாடுகைஅந்தாக்ஷரிArt of Play Singing(last words)
29.நெட்டுரு சொற்றொடர்---Art of playing with words
30.சுவைதோன்ற பண்ணுடன் வாசிக்கை---Reading with music rythm
31.நாடக உரைநடைவசனம்Prose
32.குறித்தபடி பாடுகைஸமஸ்யா பூரணம்To sing from the word given
33.பிரம்பால் பின்னுதல்---Art of Caning chair objects
34.கதிரில் நூல் சுற்றுகை---Art of hand-spinning
35.மரவேலை---Carpentry
36.மனை நூல்வாஸ்து சாத்திரம்Art of house construction
37.காசு, மணி நோட்டம்கனக,ரத்ன பரிட்சைGemology
38.நாடிப் பயிற்சிதாது வாதம்Human Pulse reading
39.மணிக்கு நிறங்கூட்டுகை -மணியிடமறிதல்---Gemology/geology
40.தோட்டக் கலை---Horticulture
41.தகர்ப்போர்/சேவற்போர் - விலங்கின விளையாட்டு---Cock/Bull fights
42.கிளிப் பேச்சு பயிற்றுவிக்கை---Art of teaching parrots
43.உடம்பு பிடிக்கை/எண்ணை தேய்க்கை---Art of ordinary/oil massage
44.குழூவுக்குறிசங்கேதாக்ஷரங்களமத்து பேசுகைCryptography
45.மருமமொழிரஹஸ்ய பாஷைCode wording
46.நாட்டுமொழியறிவுதெசபாஷையுணர்வுLinguistics
47.பூத்தேர் அமைக்கைபுஷ்பரதம்Decorating Chariat with flowers
48.முற்குறியமைக்கைநிமித்தம்Observing Superstitions
49.பொறியமைக்கை---Making of traps
50.ஒருகாலிற் கொள்கைஏகசந்தக்ராகித்வம்With one leg
51.இருகாலிற் கொள்கைதுவிசந்தக்ராகித்வம்With two legs
52.பிதிர்ப்பா விடுக்கை---Singing about fore-fathers
53.வனப்பியற்றல்காவ்யம்Writing Story songs
54.உரிச்சொல்லறிவுநிகண்டுணர்ச்சிIdiams and Phrases
55.யாப்பறிவு---Writing poems
56.அணியறிவுஅலங்காரம்Sense of dressing
57.மாயக்கலைஜாலவித்தைArt of Magic
58.ஆடையணி திறன்உடுத்தற் சாமர்த்யம்Sense of dresses
59.சூதாட்டம்---Gambling
60.சொக்கட்டான்கவறாட்டம் முதலியவைGambling with dice
61.பாவை, பந்து வைத்தாடுதல்---Playing with dolls / balls
62.யானை/குதிரையேற்றம்கஜ/துரக வாகனாதிகள்Art of riding horse/elephant
63.படைக்கலப் பயிற்சி---Armed Combat
64.உடற் பயிற்சிதேகச் சதுர்Physical Exercise


Sixty four Arts - From the translations of Dr. Santhosh Kumar Mukherji 

SL.NO.English Translations
A.TOILET
1.Make-up, toilet and use of beautifying agents
2.Painting the body, and colouring the nails, hair, etc.
3.Decoration of the forehead.
B.DRESSING
4.Art of hair dressing.
5.Art of dressing.
6.Proper matching of decorations and jewellery.
C.MUSIC AND DANCING
7.Singing.
8.Playing on musical instruments.
9.Playing on musical glasses filled with water.
10.Acting.
11.Dancing.
D.GENERAL EDUCATION
12.Good manners and etiquette
13.Knowledge of diffenrent langguages and dialects.
14.Knowledge of vocabularies.
15.Knowledge of Rhetoric or Figures of Speech.
16.Reading.
17.Reciting poems.
18.Criticism of poems.
19.Criticism of dramas and analysis of stories.
20.Filling up the missing line of a poem.
21.Composing poems to order.
22.Reply in verse (when one person recites a poem, another gives the reply in verse).
23.The art of speaking by changing the forms of words.
24.Art of knowing the character of a man from his features.
25.Art of attracting others (bewitching).
E.DOMESTIC SCIENCE.
26.Art of cooking.
27.Preparation of different beverages, sweet and acid drinks, chutneys, etc.
28.Sewing and needle work.
29.Making of different beds for different purposes and for different seasons.
F.PHYSICAL CULTURE.
30.Physical culture.
31.Skill in youthful sports.
32.Swimming and water-sports. Games.
33.Games of dice, chess, etc.
34.Games of chance.
35.Puzzles and their solution.
36.Arithmetical games.
G.ART OF ENTERTAINING.
37.Magic: art of creating illusions.
38.Trick of hand.
39.Mimicry or imitation (of voice or sounds).
40.Art of disguise.
H.FINE ARTS.
41.Painting in colours.
42.Stringing flowers into garlands and other ornaments for decorating the body, such as crowns, clapnets, etc.
43.Floral decorations of carriages.
44.Making of artificial flowers.
45.Preparation of ear-rings of shell, ivory, etc.
46.Making birds, flowers, etc., of thread or yarn.
47.Clay-modelling: making figures and images.
48.The art of changing the appearance of things such as making to appear as silk.
I.PET ANIMALS.
49.Training parrots and other birds to talk.
50.Training rams and cocks and other birds for mock fight.
J.PROFESSIONAL TRAINING.
51.Gardening and agriculture.
52.Preparation of perfumery.
53.Making furniture from canes and reeds.
54.Wood-engraving.
55.Carpentry.
56.Knowledge of machinery.
57.Construction of building (Architecture).
58.Floor decoration with coloured stones.
59.Knowledge of metals.
60.Knowledge of gems and jewels.
61.Colouring precious stones.
62.Art of war.
63.Knowledge of code words.
64.Signals for conveying messages.

நன்றி:ஸ்ரீ கோபால் ponniyinselvan@yahoogroups.com லிருந்து..

விருப்பம் :)