Saturday, April 10, 2010

திருப்புகழ்: முத்தைத்தரு பத்தித் திருநகை..



முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய திருப்புகழ் இது. அருணகிரிநாதர் இப் பாடலில் சொல், பொருள், இசை நயத்தை மிக அழகாக கையாண்டிருக்கிறார். எனக்குப் பிடித்த திருப்புகழ் இது. நீங்களும் கேட்டுப் பாருங்கள்.
சிங்கப்பூர் செல்வி ஜானகி சற்குணம் பாடியதைக் கேட்க
முருகதிரு சண்முகம் பாடியதைக் கேட்க





ராகம் - கெளளை;
தாளம் - திஸ்ரத்ருபுடை (7) / மிஸ்ரசாபு (3 1/2)
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான

முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கோட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

பாடலின் கருத்து

முத்தைத்தரு பத்தித் திருநகை - வெண்முகத்தை நிகர்த்த,அழகான பல் வரிசையும் இளநகையும் அமைந்த
அத்திககு இறை - தேவயானை (தேவயானை கிரியா சக்தி என்பதால், கர்ம யோகத்தை முதலில் அனுஷ்டிக்க அவளைக் குறிப்பிட்டார்.) தேவியின் தலைவனே
சத்திச் சரவண - சத்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே! 

முத்திக்கொரு வித்துக் குருபர ... மோட்ச வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு விதையாக விளங்கும் ஞானகுருவே 

எனவோதும் முக்கட்பர மற்குச் ... என்று துதிக்கும் முக்கண்ணர் பரமசிவனார்க்கு,
சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான ஓம் எனும் மந்திரத்தை உபதேசித்து,
இதிருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) திருமால்,பிரம்மா ஆகிய இருவரும்,

முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேண... முபபத்து முக்கோடி தேவரும் அடி பணிய நின்றவனே

பத்துத்தலை தத்தக் கணைதொடு ... இராவணனுடைய பத்துத் தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு ,

ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொருது... ஒப்பற்ற மந்தார மலையான மத்தைக் கொண்டு பாற்கடலைக் கடைந்து,
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக...... ... ஒரு பகற் பொழுதை வட்டமான சக்கிராயுத்தத்தால் இரவாக்கி,

பத்தற்கிர தத்தைக் கடவிய... நண்பனாகிய அருச்சுனனுக்கு தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்தி,

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான நீலமேக வண்ணன் பாராட்டும் பரம்பொருளே,

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே...... பரிவோடு என்னைக் காத்தருளும் நாள் ஒன்று உண்டோ?,

(இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை விரிவாக வர்ணிக்கிறது). 
தித்தித்தெய ஒத்தப் பரிபுர... தித்தித்தெய என்ற தாளாத்துக்கு ஒத்துசிலம்புகள் அணிந்த,
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டிய பாதங்களை வைத்துக் காளிதேவி
திக்கொட்க நடிக்க... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம் செய்யவும்
கழுகொடு கழுதாட........ கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்
திக்குப்பரி அட்டப் பயிரவர்... எட்டுத் திக்குகளிலும் உலகங்களாஇத் தாங்குகின்ற எட்டு பைரவர்கள் (அசிதாங்கன், காபாலி, சண்டன், உருகு, குரோதன், சங்காரன், பீடணன், உன்மத்தன்)
சித்ரப்பவு ரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக எனவோத......... ‘தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக என்ற தாள ஓசையைக் கூறவும்'
கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாக பற்பல பறை வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்

களமிசை முதுகூகை... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள் 
குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியெனகோட்புற்றெழ ... ‘குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடி’ என்றெல்லாம் குழறி வட்டமாகச் சுழன்று மேலே எழவும, 

நட்பற்ற அவுணரை... சினேக எண்ணமில்லாத விரோத எண்ணங்கொண்ட அசுரர்களை,
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட ... கொன்று பலி கொடுத்துஅசுரர் குல மலை கிரௌஞ்சகிரி தூளாக,

ஒத்துப் பொரவல பெருமாளே....... ... தர்ம மார்க்கத்திற்குப் பொருந்தபோர்செய்யவல்ல பெருமாளே
பாடல்கள் ஒலிவடிவம்: நன்றி , கௌமாரம்.
வீடியோவில் அருணா சாய்ராம் பாடுகிறார் , கேளுங்கள்





நன்றி: PIRAKESHPATHI.BLOGSPOT.COM

1 comment:

  1. super and fantastic , please keep publishing siva puranam in tamil language . it was one of the excellent work for the devotees of lord shiva.

    நமசிவாய வாழ்க!

    ReplyDelete

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

விருப்பம் :)